சிதம்பரம் இரவிச்சந்திரன்
ஒற்றைக் காலில் நிற்பது வாழ்க்கையின் பிற்பகுதியில் நீண்ட ஆயுளிற்கு உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பத்து விநாடி நேரம் ஒரு காலில் நிற்க முடியாமல் போனால் அவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் உயிரிழக்கும் ஆபத்து இரு மடங்கு அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலை உடல் நலத்தில் வரப்போகும் ஆபத்தைக் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பொது இடங்கள், அலுவலகம், விருந்துகளில் நடுத்தர வயது அல்லது அறுபதைக் கடந்தவர் ஒருவர் பத்து விநாடிகள் உடலை சமநிலைப்படுத்தி ஒற்றைக் காலில் நிற்க முடியவில்லை என்றால் அதே வயதில் உள்ள மற்றவர்களைக் காட்டிலும் மரணமடையும் வாய்ப்பு இரு மடங்கு உள்ளது. உடல் இயக்கச் செயல்களில் உடல் சமநிலை (body balance) என்பது உடல் நலத்தின் முக்கிய அடையாளம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒற்றைக் காலில் நின்று உடலைச் சமநிலையில் நிலைநிறுத்த முடியவில்லை என்றால் அது பக்க வாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்று முன்பு நடந்த ஆய்வுகள் கூறின. இத்தகையவர்கள் நினைவாற்றல் பரிசோதனைகளிலும் சரிவர வெற்றி பெற முடியாத வர்களாக இருந்தனர். இதனால் இந்நிலைக்கும் டிமென்சியா போன்ற மறதி நோய்களால் அதிகமாகப் பாதிக்கப்படுவதற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று கருதப்பட்டது.
முதல் ஆய்வு
இதுவே ஒற்றைக் காலில் நிற்கும் திறன் குறித்து உலகில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு. பன்னிரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில் யு எஸ், யு கே, ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்வதேச ஆய்வாளர் கள் பங்கேற்றனர். ஒரு காலில் நிற்கும் திறனிற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையில் இருக்கும் நெருங்கிய தொடர்பை இந்த ஆய்வாளர் குழு தீவிரமாக ஆராய்ந் தது. உற்றுநோக்கலை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் இறப்பு விகிதம் அதிகமாவதற்குரிய காரணங்களைக் கண்டறிய வில்லை. ஒரு காலில் நிற்கும் திறனற்றவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் எந்த ஒரு நோய் பாதிப்பாலும் மரணமடையும் ஆபத்து உள்ளது என்று ஆய்வுக்குழு கூறுகிறது. இந்த ஆய்வுக்கட்டுரை “விளையாட்டு மருத்துவம்” (Sports Medicine) என்ற பிரிட்டிஷ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு அதிர்ச்சி தரும் உண்மை என்று ஆய்வுக்குழுவின் தலைவர் மற்றும் ரியோடி ஜெனீரோவில் உள்ள க்ளின்மெக்ஸ் உடற்பயிற்சி மருத்துவ க்ளினிக் நிபுணர் (Clinimex exercise Medicine Clinic) டாக்டர் க்ளாடியோ கில் அரூஜோ (Dr Claudio Gil Arujo) கூறுகிறார். வழக்கமாக வயதானவர்களிடையில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளில் அவர்களின் ஒரு காலில் நிற்கும் திறனும் பரிசோதிக்கப்படவேண்டும். தசைக ளின் வலு, நெகிழ்வுத்தன்மை மற்றும் உடற்பகுதிகளை அசைக்கும், வளைக்கும் ஏரோபிக் திறன் ஆகியவை சோதனைகளில் உட்படுத்தப்படுவது போல இந்த சோதனையும் நடத்தப்படவேண்டும் என்று அரூஜோ கூறுகிறார்.
சோதனை முறைகள்
ஒற்றைக் காலில் நிற்கும் திறன் பொதுவாக அறுபது வயது வரை பேணப்படுகிறது. இத்திறனைப் பரிசோதிக்க உலக அளவில் நிலைப்படுத்தப்பட்ட விதிகள், பரிசோதனைகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் ஆய்வுக்குழு வலியுறுத்துகிறது. இன்றுவரை கீழே விழுதல், முட்டிகளின் வலு ஆகியவை பற்றிய விவரங்கள் மட்டுமே சர்வதேச அளவில் உள்ளன. முட்டி வலி தொடர்பான பயிற்சி முறைகளே உருவாக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன. 2008 முதல் 2020 வரை 51 முதல் 75 வயதுள்ள 1702 பேர்களிடையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. தொடக்கத்தில் பங்கேற்பாளர்கள் பத்து விநாடிகள் எதையும் தாங்கிப் பிடிக்காமல் நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் பரிசோதனையின்போது கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்து, கண் பார்வையை கருத்தூன்றி ஒரு இடத்தில் நிலைநிறுத்தி தரையில் இருந்து எடுத்த ஒரு காலை மற்றொரு காலின் கீழ்ப்பகுதிக்கு எதிர்திசையில் பின்பக்கம் வைத்து நிற்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். நேராக நின்று இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி செய்ய மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.
உயிரிழப்பு விகிதம்
ஆய்வில் கலந்து கொண்டவர்களில் ஐந்து பேரில் ஒருவர் (21%) ஒரு காலில் நிற்கமுடியாமல் தோல்வி யடைந்தனர். அடுத்த பத்து ஆண்டில் 123 பேர் பல்வேறு காரணங்களால் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். வயது, பால், வாழும் சூழல் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த ஆய்வுகள் நடந்தன. ஒரு காலூன்றி மற்றொரு காலில் நிற்கமுடியாத வர்களில் மற்றவர்களைக் காட்டிலும் வெவ்வேறு கார ணங்களால் உயிரிழக்கும் ஆபத்து 84% கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வு முடிவுகள் வரை யறைகள் கொண்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும் பிரேசிலைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர். எனவே மற்ற இனத்தவர் மற்றும் இதர நாடுகளிலும் இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஆய்வுக்குழு வலியுறுத்துகிறது. உலக மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் இந்த ஒற்றைக் கால் சோதனை விரைவான நன்மையளிக் கக்கூடிய முறையாகப் பயன்படும் என்று ஆய்வா ளர்கள் நம்புகின்றனர். சோதனையில் எதிர்மறையான முடிவுகள் வரும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடல்திறனை மேம்படுத்த வாய்ப்புகள் நிறைய உள்ளன. நடுத்தர வயது மற்றும் வயது முதிர்ந்த வர்களில் ஆண்-பெண் ஆகியோருக்கு இடையில் முடிவுகள் மாறுபடுமா என்பது பற்றி மேலும் ஆராயப்படவேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.